‘பான்’ எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய வசதி - வருமான வரித்துறை அறிமுகம்
Views - 205 Likes - 0 Liked
-
வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்கும் புதிய வசதி ஒன்றை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக வருமான வரித்துறையின் https://incometaxindiaefiling.gov.in/ என்ற இணையதளத்தின் ‘முகப்பு’ பக்கத்தில் புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய முறைப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு, இருவித எண்களுடன் (பான் மற்றும் ஆதார் எண்கள்) ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற சரியான பெயரும் இருத்தல் அவசியம் ஆகும்.இந்த முறையில் விவரங்களை செலுத்தியவுடன் விண்ணப்பதாரரின் விவரங்களை ‘உடாய்’ (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) சரிபார்த்து ஏற்றுக்கொள்ளும்.
எனவே பிறந்த தேதி, பாலினம், பான் மற்றும் ஆதார் எண் போன்ற விவரங்களை எந்தவித வேறுபாடும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். இதில் ஏதாவது சிறிய வேறுபாடுகள் இருப்பின் ஆதார் தொடர்பான ஒருமுறை கடவுச்சொல் (ஒன்-டைம் பாஸ்வேர்டு) தேவைப்படும். இது விண்ணப்பதாரரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த முறைப்படி வருமான வரி செலுத்துவோர் மற்றும் தனிநபர்கள் யாரும், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம் என வருமான வரித்துறை கூறியுள்ளது.News