நிதி நிறுவனம் நடத்தி ரூ.18½ கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
Views - 295 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியை சேர்ந்த செல்வராஜன் (வயது 50), திற்பரப்பு அருகில் உள்ள தோதாத்துவிளையை சேர்ந்த ராஜேஸ்வரி அம்மா (52), நாகர்கோவில் அருகே பாம்பன்விளையை சேர்ந்த சக்திவேல் (36) உள்பட ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு “திருமருதூர் அக்ரோ டெவலப்பர்ஸ் இந்தியா லிமிடெட்’’ என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் 7 பேர் நிர்வாகிகளாக செயல்பட்டனர். குமரி மாவட்டத்தில் முகவர்கள் மூலமாக பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி தவணை முறையில் ரூ.60 ஆயிரம் செலுத்தினால் 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் ரூ.90 ஆயிரம் பணமாகவோ, அதற்கு ஈடாக பொதுமக்களுக்கு 10 சென்ட் நிலமாகவோ கொடுக்கப்படும் என்று சொல்லி பணம் வசூலித்தனர்.
இதை நம்பி நாங்கள் உள்பட 3,700 பேர் முகவர்கள் மூலமாகவும், நேரடியாகவும் பணம் செலுத்தினோம். அதற்கான ரசீது மற்றும் பாண்ட் ஆகியவற்றை நிதி நிறுவனம் நடத்தியவர்கள் தந்தார்கள். 5 வருடம் முடிந்த பிறகும் பணம் செலுத்தியவர்களுக்கு நிதி நிறுவனத்தினர் கூறியபடி பணத்தையோ, நிலத்தையோ கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதற்கிடையே அந்த நிதி நிறுவனம் போலி நிதி நிறுவனம் என்பது எங்களுக்கு தெரிய வந்தது.
இந்தநிலையில் நிர்வாகிகள் அலுவலகத்தை பூட்டி விட்டு அவரவர் சொந்த ஊரான மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தலைமறைவாகி விட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டால் தருகிறோம், தருகிறோம் எனக்கூறி ஏமாற்றினர். எங்கள் அனைவருக்கும் நிதி நிறுவனத்தினர் தர வேண்டிய மொத்த தொகை ரூ.18 கோடியே 50 லட்சம் ஆகும். தற்போது தொலைபேசியில் பணம் கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனவே போலி நிதி நிறுவனம் நடத்தி எங்களுடைய பணத்தை ஏமாற்றி சென்ற நிதி நிறுவன நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News