வேல் யாத்திரைக்கு தடை குமரி மாவட்டத்தில் வாகனங்கள் சோதனை
Views - 337 Likes - 0 Liked
-
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் 2வது நாளாக போலீசார் கண்காணிப்பு நடந்தது. எஸ்பி அலுவலகத்தில் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே யாத்திரைக்கு செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் எஸ்.பி பத்ரிநாராயணன் ஆய்வு செய்தார்.
பாஜகவின் வேல் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடைந்தது. ஆனால் வேல் யாத்திரைக்கு காவல்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் வேல் யாத்திரை நிறைவு செய்வதற்காக திருச்செந்தூருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குமரியில் இருந்து வேல் யாத்திரைக்குச் செல்லும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் சோதனைச் சாவடிகள் மூலமாக தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் சோதனை சாவடிகளில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச்சாவடிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்பி அலுவலகத்தில் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது .குமரி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் இன்று காலை முதல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் ஆய்வு செய்தார்.
News