" “If opportunity doesn't knock, build a door.”"

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்? : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Views - 280     Likes - 0     Liked


  • தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து படிப்படியான தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
     
    இந்நிலையில் பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 
     
    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கான இறுதி முடிவை முதல்-அமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பின் போது வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
     
    மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாள்களில் கோயில்கள் மூடப்பட்டிருப்பதில் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
    News